விபத்தில் சிக்கிய வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதல்- 3 பேர் பலி!
திருப்பூர்
திருப்பூரில் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி குழந்தை நகரை சேர்ந்தவர் கோபிகண்ணன். லாரி ஓட்டுநர். இவர் சேலத்தில் இருந்து கோவைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருப்பூர் பெருமாநல்லூர் அடுத்த கருக்கன்காட்டுபுதூர் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக வாகனம் சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.
இதில், கோபிகண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே, விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் சாலையில் நடுவே கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல், அந்த வழியாக மற்றொரு இருசக்கர வாகனம் அதன் மீது மோதியது. இதில், வாகனத்தை ஓட்டிவந்த காளிப்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (22), சந்தோஷ் (20) ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.