இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இருவர் பலி!
தேனி
தேனி அருகே இருசக்கர வாகனமும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்துள்ள டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (31). கூலி தொழிலாளி. இவர் நேற்று போடிநாயக்கனூரை சேர்ந்த பிரவீன்குமார் (19) என்பவருடன், போடியில் இருந்து தேனிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கோடாங்கிப்பட்டி அருகே சென்றபோது முத்துராஜ் வாகனத்தின் மீது, எதிரே வந்த வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் வாகனத்தில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், முத்துராஜ் மீது பின்னால் வந்த கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பிரவீன்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, வீரபாண்டியை சேர்ந்த வேன் ஓட்டுநர் தெய்வேந்திரனை கைதுசெய்தனர்.