‘தென்காசி விவசாயி உடலில் காயங்கள் இருக்கிறது’ வனத்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பு
தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த வாகைகுளத்தை சேர்ந்த அணைக்கரைமுத்து (76) என்பவர், தன் தோட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்து இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் அவரை விசாரிக்க கடையம் வன சரக அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது முத்து மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டு, அபராதம் செலுத்த சம்மதித்ததாக தெரிகிறது. விசாரணையின் போது அதிகாரிகளிடம் முத்து நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத முத்துவின் குடும்பத்தினர், வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் அவரை தாக்கியதால் தான் உயிரிழந்ததாக புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே முத்து மரண விவகாரத்தில் மூத்த தடயவியல் மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்யக்கோரி முத்துவின் மனைவி பாலம்மாள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், விதியை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் விசாரணையில் முத்துவின் உடலில் 18 காயங்கள் இருந்ததாக கூறப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடற்கூராய்வு அறிக்கையில் 4 இடங்களில் மட்டுமே காயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாளை இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப் படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.