ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதல்; புது மாப்பிள்ளை உள்பட மூவர் பலி!

 

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதல்; புது மாப்பிள்ளை உள்பட மூவர் பலி!

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே லாரியின் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் சந்திரமவுலி(55). இவரது மனைவி வசுந்தரா தேவி (47). இவர்களது மகன் வேணுகோபால் (26). இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பெண் ஒருவருடன், நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையொட்டி, ராணிப்பேட்டையை சேர்ந்த உறவினர் கண்ணையாவுடன் ஓசூருக்கு சென்ற சந்திரமவுலி குடும்பத்தினர், நிச்சய தார்த்தத்தை முடித்துவிட்டு காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை வேணுகோபால் ஓட்டினார்.

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதல்; புது மாப்பிள்ளை உள்பட மூவர் பலி!

நேற்றிரவு 10 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் சென்றபோது, வேணுகோபால் முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கார், லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி வேணுகோபால், கண்ணையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வசுந்தரா தேவி, சந்திரமவுலி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசுந்தரா தேவி உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்திரமவுலி, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய ஆம்பூர் கிராமிய போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.