திருமணம் செய்து வைக்க மறுத்த பெற்றோர்… வேதனையில் இளைஞர் தற்கொலை…
கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே பெற்றோர் திருமணம் செய்து வைக்க தாமதித்ததால், இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே உள்ள தேரிவிளை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு சசிகுமார்(37), ராஜ்குமார்(35) என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சசிகுமாருக்கு நீண்ட நாட்களாக பெண் தேடியும், திருமணம் அமைய வில்லை என கூறப்படுகிறது. இதனால், இளைய மகன் ராஜ்குமார் தனக்கு முதலில் திருமணம் செய்து வைக்கும்படி பொன்னுசாமியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், சசிகுமாருக்கு திருமணம் முடிந்த பிறகே, அவருக்கு திருணம் செய்து வைப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜ்குமார், நேற்று மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், மயங்கிய நிலையில் கிடந்த ராஜ்குமாரை, உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த தென்தாமரைக்குளம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.