வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில், தனியார் நிறுவன ஊழியர் பலி!

 

வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில், தனியார் நிறுவன ஊழியர் பலி!

மதுரை

மதுரையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை பாலரெங்கபுரத்தில் வசித்து வந்தவர் சரவணன் (42). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகாத நிலையில், சரவணன், தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சரவணன் வீட்டில் இருந்து திடீரென வெடிச் சத்தம் கேட்டது.

இதனால் அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, சரவணன் வீட்டின் சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து, அவர்கள் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில், தனியார் நிறுவன ஊழியர் பலி!

பின்னர், அறையில் இடிபாடுகளை அகற்றியபோது, அதனுள்ளே சரவணன் சடலமாக கிடந்தார். அவரது சடலத்தை தெப்பகுளம் தெற்கு காவல் நிலைய போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த தீ விபத்தில் சரவணன் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.