பைக் மீது லாரி மோதிய விபத்தில், அரசுப்பள்ளி மாணவி பலி!

 

பைக் மீது லாரி மோதிய விபத்தில், அரசுப்பள்ளி மாணவி பலி!

கரூர்

கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் அரசுப்பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் பவித்திரம் பாரதி நகரை சேர்ந்தவர் ரெங்கசாமி. ஆட்டு வியாபாரி. இவரது மகள் ஹர்ஷனா (14). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். ஹர்ஷனா நாள்தோறும் அருகில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பால் ஊற்றுவது வழக்கம். அதன்படி இன்று காலை ஹர்ஷனா, பால் ஊற்றிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

பைக் மீது லாரி மோதிய விபத்தில், அரசுப்பள்ளி மாணவி பலி!

பவித்திரம் அருகேயுள்ள முனியப்பன் கோவில் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஹர்ஷனா வாகனத்தின் மீது, எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஹர்ஷனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த க.பரமத்தி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். பின்னர், உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் பாலசுப்ரமணியனை கைது செய்தனர்.