தக்காளி வியாபாரி வீட்டில் மயக்க மருந்து தெளித்து நகை, பணம் கொள்ளை!

 

தக்காளி வியாபாரி வீட்டில் மயக்க மருந்து தெளித்து நகை, பணம் கொள்ளை!

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையில் தக்காளி வியாபாரி வீட்டில் மயக்க மருந்து தெளித்து மர்மநபர்கள் 4 சவரன் தங்க நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அந்த பகுதியில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(32) என்ற மனைவியும், நதியா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், ரவி நேற்றிரவு தக்காளி லோட் எடுப்பதற்காக ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு புறப்பட்டு சென்றார்.

இதனால் மகேஸ்வரி, அவரது மகள் நதியா ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு அறையில் தூங்கி உள்ளனர். இந்த நிலையில், நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் அறையின் ஜன்னல் வழியாக மயக்க மருந்தை தெளித்து உள்ளனர். இதில் தாய், மகள் இருவரும் மயக்க நிலைக்கு சென்றுள்ளனர்.

தக்காளி வியாபாரி வீட்டில் மயக்க மருந்து தெளித்து நகை, பணம் கொள்ளை!

இதனை அடுத்து, கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 4 சவரன் தங்க நகைகளையும், 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் திருடி சென்றனர். மயக்கம் தெளிந்து பார்த்தபோது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி, இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், கொள்ளை குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.