“பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி” : ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல் ஹாசன் கருத்து!
சுற்றுச்சூழல் பாதிப்பு, துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி என பல்வேறு முரண்களை கொண்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு விதித்த தடை தொடரும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தூத்துக்குடி மக்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது.
ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி.
இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான்.
மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.
— Kamal Haasan (@ikamalhaasan) August 18, 2020
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று”என்று அவர் பதிவிட்டுள்ளார்.