“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும் தயாநிதி மாறன்
மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு மாணவர்கள் பேசக்கூடாது என நினைக்கிறீர்கள்? தி.க., தி.மு.க போல் ஏன் அதிமுக செயல்படுகிறது? முதலில் உங்கள் கட்சியில் உள்ள கொடியில் அண்ணா படத்தை தூக்குங்கள், கட்சிப் பெயரிலும் அண்ணா என்ற வார்த்தையை தூக்கிவிட்டு அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று வையுங்கள்.
அப்போது தான் நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கும்” என்று கூறியிருந்த அவர் தேசியக் கொடியில் உள்ள நிறங்களை விமர்சித்தும் பேசினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அவதூறாகவும் தேசியக் கொடியை அவமரியாதை செய்தும் எஸ்வி.சேகர் பேசியதாக எஸ்.வி.சேகரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து விளக்க வீடியோவை எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ளார். அதில், “தேசியக் கொடியை என் தாய்க்கு மேலாக, தேசத்தின் கௌரவமான விஷயமாக 17 ஆண்டுகளாக பெருமையுடன், கர்வத்துடன் அணிந்து வருகிறேன். தேசியக் கொடியை நான் எந்த அளவுக்கு மதிக்கிறேன் என்பது பற்றி எல்லோருக்கும் தெரியும். தேசியக் கொடி இல்லாமல் நான் வெளியே வருவது இல்லை. தேசியக் கொடியோடு டெல்லிக்கு செல்லும்போது, அரசு அதிகாரிகள் சல்யூட் அடிப்பார்கள். அதை அவமதிக்கும் விஷயத்தை நான் செய்யவே மாட்டேன். நான் உயிரோடு இருக்கும் வரை அந்த விஷயத்தை செய்ய மாட்டேன். ஏனெனில் இந்தியனாகப் பிறந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவமதித்தேன் என்று கூறுவது தவறான புரிதலாக இருக்கலாம்” என்று விளக்கமளித்தார்.
மந்தைவெளியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் ஏற்பட்ட குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது. கெட்டுப்போன பாலுக்கு மட்டுமல்ல, கெட்டுப்போன ஆளுக்கும் சேர்த்துதான் நடவடிக்கை!
I respect the national flag. Do you?
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) August 14, 2020
இந்நிலையில் எம்பி தயாநிதி மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில், “மந்தைவெளியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் ஏற்பட்ட குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது. கெட்டுப்போன பாலுக்கு மட்டுமல்ல, கெட்டுப்போன ஆளுக்கும் சேர்த்துதான் நடவடிக்கை! I respect the national flag. Do you? என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.