பெண் தவறவிட்ட 10 சவரன் நகையை, சில மணி நேரத்தில் மீட்ட போலீசார்!

 

பெண் தவறவிட்ட 10 சவரன் நகையை, சில மணி நேரத்தில் மீட்ட போலீசார்!

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பெண் தவறவிட்ட 10 சவரன் தங்க நகையை சில மணி நேரங்களிலேயே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

சென்னை மூலக்கடையை சேர்ந்த பெண் ஒருவர் உறவினர் திருமணத்திற்காக பேருந்து மூலம் திருவண்ணாமலை வந்தார். அங்கிருந்து ஆட்டோ மூலம் அண்ணாநகரில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றடைந்தார். அப்போது, திருமணத்திற்காக கொண்டுவந்த 10 சவரன் நகையை ஆட்டோவிலேயே தவறி விட்டு இறங்கி சென்றார். இதனை அறியாத ஓட்டுநர் ஆட்டோவை எடுத்துகொண்டு சென்றார்.

பெண் தவறவிட்ட 10 சவரன் நகையை, சில மணி நேரத்தில் மீட்ட போலீசார்!

இந்த நிலையில், வீட்டில் சென்று பார்த்தபோது நகையை தவற விட்டதை அறிந்த அந்த பெண் உடனடியாக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவர் பயணித்த ஆட்டோ திருவண்ணாமலை மத்தளங்குளம் தெருவை சேர்ந்த சலீம் என்பவருடையது என தெரியவந்தது.

இதனை அடுத்து, சலீமின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது ஆட்டோவில் தொலைந்த நகை கிடந்தது. உடனடியாக நகையை மீட்ட போலீசார், அதனை பெண்ணிடம் ஒப்படைத்தனர். புகார் அளித்த சில மணி நேரத்திலேயே நகையை மீட்டுகொடுத்த போலீசாருக்கும், நேர்மையாக நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.