கொரோனா பரிசோதனையால் அரசு மருத்துவமனையில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1504 ஆக அதிகரித்தது. இதனால் திருச்சியில் கொரோனா பரிசோதனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை செய்யும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்துள்ளனர்.
அங்கு மக்களுக்கு தேவையான இருக்கை வசதிகள் செய்யாததால் மக்கள் கூட்டம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. மக்கள் வரிசையில் நிற்காமல் வேகமாக சோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூட்டமாக நின்றதால் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனை நிர்வாகத்தினர் திணறியுள்ளனர். அதனால் கடுப்பான அதிகாரிகள் மக்களை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கொவிட் பரிசோதனையால் அம்மருத்துவமனையில் கூட்டம் அலைமோதியதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.