திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

 

திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

திருப்பூர்

தாராபுரம் அருகே திருமணமாகி 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த காதக்கோட்டையை சேர்ந்தவர் நவீன்குமார் (29). கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த நித்யாவுடன் (21) திருமணம் நடைபெற்றது. நவீன்குமார் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தம்பதியினர் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து உள்ளது.

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு நித்யாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கணவருடன் திண்டுக்கல்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் திருப்பூருக்கு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்ற நவீன்குமார், காலை 10 மணியளவில் வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார்.

திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

அப்போது, கதவு உட்புறமாக தாளிடப்பட்டு இருந்ததால், நவீன்குமார் கதவை தட்டி உள்ளார். ஆனால், நித்யா கதவை திறக்காததால் சந்தேகமடைந்த நவீன்குமார் கதவை உடைத்துச் சென்று பார்த்தார். அப்போது, நித்யா மின் விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த நவீன், நித்யாவை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர் நித்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து, தகவல் அறிந்த நித்யாவின் பெற்றோர்கள், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி மூலனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 10 மாதத்தில் நித்யா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து தாராபுரம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.