இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், தந்தை – மகன் பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், தந்தை – மகன் பலி!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனம் மீது, மணல் லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காஞ்சி ஓரவந்தவாடி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தாஸ். இவருக்கு திருமணமாகி அல்போன்ஸ் என்ற மனைவியும், 5 வயதில் சேவன் என்ற மகனும் உள்ளனர். நேற்று புனித வெள்ளியை ஒட்டி, தாஸ் குடும்பத்துடன் போளூரில் உள்ள தேவாலயத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், தந்தை – மகன் பலி!

மேல் வன்னியனூர் அருகே சென்றபோது தாஸ் வாகனத்தின் மீது, எதிரே மணல் பாரம் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் சாலையில் தூக்கிவீசப்பட்ட தாஸ் மற்றும் அவரது மகன் சேவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அல்போன்ஸ் பலத்த காயமடைந்தார்.

விபத்து பகுதிக்கு விரைந்து வந்த கலசப்பாக்கம் போலீசார், அல்போன்ஸை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிந்து, போளூரை சேர்ந்த லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.