×

’சுதந்திரப் போராட்ட வீரர் நல்லக்கணுவை இழிவுப்படுத்துவதா?’ சமூக ஊடகம் மூலம் பதற்றம் உருவாக்குபவர்களைப் பற்றி தொல்.திருமாவளவன்

சமூக ஊடகம் வழியே சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குபவர்களை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவதூறு பரப்பியும், முக்கியமான ஆளுமைகளை இழிவுபடுத்தியும், மதச் சின்னங்களை அவமதித்தும் சமூக பதற்றத்தை ஏற்படுத்த சில பயங்கரவாத சக்திகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அவர்கள்மீது குறிப்பான புகார்கள் கொடுக்கப்பட்ட பிறகும்கூட காவல்துறை உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் தயக்கம் காட்டுகிறது. தமிழக அரசு
 

சமூக ஊடகம் வழியே சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குபவர்களை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவதூறு பரப்பியும், முக்கியமான ஆளுமைகளை இழிவுபடுத்தியும், மதச் சின்னங்களை அவமதித்தும் சமூக பதற்றத்தை ஏற்படுத்த சில பயங்கரவாத சக்திகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அவர்கள்மீது  குறிப்பான புகார்கள் கொடுக்கப்பட்ட பிறகும்கூட காவல்துறை உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் தயக்கம் காட்டுகிறது. தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் இந்த சனாதன பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழகத்தினுடைய மூத்த தலைவர்களில் ஒருவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் ஆபாசமான அவதூறு செய்தி பரப்பப்பட்டு உள்ளது. அது போலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைக் குறித்தும் இப்படியான ஆபாச செய்திகள் பரப்பப்பட்டு இருக்கின்றன. இவை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வியப்பும் வேதனையும் அளிக்கிறது. தமிழக அரசு இதில் பாராமுகமாக இருக்காமல் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

காட்சி ஊடகங்களில் பணியாற்றும் சிலர்மீது இவ்வாறு அவதூறு செய்திகளைப் பரப்பி அவர்களது பணிக்கு ஊறு விளைவிக்கின்றனர். அது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் எதன்மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

கொரோனா பேரிடர் காரணமாக மக்கள் திரள் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள முடியாத நிலையைப் பயன்படுத்திக்கொண்டு சமூக ஊடகங்களில் சனாதனப் பயங்கரவாதிகள் வெறுப்புப் பிரச்சாரத்தையும் தமிழகத்தைப் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட செய்திகளையும் பரப்பி வருகின்றனர். தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரது உருவச்சிலைகளை சேதப்படுத்தியும்; பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தியும் வருகின்றனர். அதுமட்டுமின்றி கோவை பகுதியில் தொடர்ந்து மதரீதியான வன்முறையைத் தூண்டும் விதமாக வழிபாட்டு இடங்களில் அசுத்தம் செய்வது சேதம் செய்வது என்பவை நடத்தப்படுகின்றன. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அதே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததும் அவர்களது பின்னணியை சரியாக விசாரிக்காமல் அவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என்று காவல்துறை அவசரஅவசரமாக அறிவிப்பது யாரையோ அவர்கள் பாதுகாக்க முனைவதாகவே எண்ணத்தோன்றுகிறது.

இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறவர்கள் சாதாரணமான குற்றவாளிகள் அல்ல. பயங்கரவாதம் என்பதற்கு சட்டம் அளித்துள்ள விளக்கத்தின்படி அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறோம். தொடர்ந்து இத்தகைய செயல்களைத் தமிழக அரசு அனுமதித்து வந்தால்  அமைதி சீர்குலைய அரசே துணை போவதாகத்தான் பொருள்படும்.  எனவே, அத்தகைய ஒரு நிலை ஏற்படுவதற்கு முன்பே தமிழக அரசு விழித்துக் கொண்டு இதில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்த சனாதனப் பயங்கரவாதிகளைக் கண்டித்து வரும் ஜூலை-22ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைக்கும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.