“அவர் தந்த ஆலோசனைகள் அட்சயபாத்திரம்” : முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா தொற்றால் காலமானார். சென்னையில் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். திமுகவின் அதிரடி பேச்சாளராகவும், உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான்.
இந்நிலையில் ரகுமான்கான் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரகுமான்கான் அவர்கள் இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் மறைவெய்தினார். அவரது மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று நாட்களுக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் தனது ட்வீட்டில், “கழகத்தின் இடி முழக்கம், மாணவப் பருவத்திலேயே போர்ப்பரணி பாடிய அண்ணன் ரகுமான்கானை இழந்து தவிக்கிறேன். அவர் தந்த ஆலோசனைகள் அட்சயபாத்திரம். அவரது மூச்சு நின்றாலும் அவரின் எழுத்தும், பேச்சும் என்றும் நம் கண்களிலேயே நிற்கும்! அண்ணனின் மறைவிற்கு கனத்த இதயத்துடன் என் ஆழ்ந்த இரங்கல்” என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.