×

தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி… ரூ.2 கோடி தங்க நகைகள், பணம் தப்பியது!

கோவை கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை போத்தனூர் அடுத்த சுந்தராபுரம் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பிரபல தனியார் நகைக் கடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பணி முடிந்து ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து, நேற்று காலை நிறுவனத்தை திறக்க சென்றபோது, ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போத்தனூர்
 

கோவை

கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை போத்தனூர் அடுத்த சுந்தராபுரம் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பிரபல தனியார் நகைக் கடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பணி முடிந்து ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து, நேற்று காலை நிறுவனத்தை திறக்க சென்றபோது, ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, லாக்கரில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பத்திரமாக இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, அலுவலக சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் மர்மநபர்கள் இருவர் பூட்டை உடைத்து உள்ளே சென்றதும், லாக்கரை உடைக்க முடியாததால் அவர்கள் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து நிறுவன மேலாளர் கதிர்வேல் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி பதிவின் அடிப்படையில் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.