குமரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் குத்திக்கொலை… தப்பியோடிய ரவுடிக்கு போலீஸ் வலை…
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் திங்கள் நகர் அடுத்த இரணியல் பகுதியை சேர்ந்தவர் சுஜித். இவர் திங்கள் நகர் மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், சுஜித் நேற்று, தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த ஸ்டெபின் என்பவருடன் திங்கள் நருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சுஜித்திடம் செல்போனில் தொடர்புகொண்ட திங்கள் நகர் பெரியபள்ளியை சேர்ந்த சுரேஷ் என்பவர், பேச வேண்டுமென கூறி மேலமாங்குழி குளம் பகுதிக்கு வர சொல்லியுள்ளார். இதனையடுத்து, சுஜித் – ஸ்டெபின் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். அங்கு நின்ற சுரேஷ், அவரது நண்பர் ராபி ஆகியோர், சுஜித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது, சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுஜித்தை சரமாரியாக குத்தினார்.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இதனை தடுக்க முயன்ற ஸ்டெபினையும் அவர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதுகுறித்து ஸ்டெபின் அளித்த தகவலின் பேரில் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுஜித் உடலை மீட்டு, குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
அதில், வாடிவிளை பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் சுஜித் மற்றும் சுரேஷ் ஆகியோர் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததும், இதனால் ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.