தஞ்சை அருகே நிலத் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை!

 

தஞ்சை அருகே நிலத் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை!

தஞ்சை

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே நிலத் தகராறில் இளைஞர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சூழியக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். விவசாயி. இவருக்கு பிரபு(38), சின்னராசு(35) என்ற 2 மகன் உள்ளனர். இந்த நிலையில், சகோதரர்கள் இருவரும் நேற்றிரவு சூழியக்கோட்டையில் இருந்து சாலியமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சாலியமங்கலம் அருகே சென்றபோது, எதிரே 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 மர்மநபர்கள், அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

தஞ்சை அருகே நிலத் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை!

அப்போது, அவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், பிரபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சின்னராசுவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார், பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறில் கொலை சம்பவம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதனிடையே, இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் சூழியக்கோட்டை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.