பள்ளிபாளையத்தில் அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை!

 

பள்ளிபாளையத்தில் அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை!

நாமக்கல்

பள்ளிபாளையத்தில் கோவில் முன்பு தூங்கிய அரசியல் கட்சி நிர்வாகி, மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (46). இவரது மனைவி மலர். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். தொடக்கத்தில் ஆதித் தமிழர் பேரவையில் மாவட்ட நிர்வாகியாக இருந்த ரவி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அருந்தமிழர் பேரவை என்ற அமைப்பை தொடங்கி, அதன் பொதுச் செயலாளராக இருந்து வந்தார்.

பள்ளிபாளையத்தில் அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை!

இந்த அமைப்பின் மூலம் அருந்ததியர் சமூக மக்களின் பிரச்சினைகளுக்காக, குரல் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கரட்டாங்காடு மாரியம்மன் கோவில் அருகே ரவி படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் ரவியை, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு, தப்பியோடினர்.

நேற்று அதிகாலை, ரவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள், பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா?, அல்லது வேறு ஏதும் காரணமாக என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.