நடிகர் விவேக் உயிரிழப்பிற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை -தேசிய குழு வெளியிட்ட ஆய்வு தகவல்
ஜனங்களின் கலைஞர் நடிகர் விவேக் உயிரிழப்பிற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆராய்ந்த தேசிய குழு தகவல் வெளியிட்டிருக்கிறது.
கொரோனா தடுப்பூசியை தற்போது பலரும் தேடிச்சென்று செலுத்தி கொள்கின்றனர். ஆனால் தொடக்க காலத்தில் கொரோனா ஊசி போடுவதற்கு பலரும் அஞ்சி பின்வாங்கினர். அந்த சமயங்களில் அரசியல் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
இதில் நடிகர் விவேக் ஒரு படி மேலே சென்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கே சென்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு, கொரோனாவிலிருந்து தப்பிக்க எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி தடுப்பூசி கொண்ட நடிகர் விவேக்கிற்கு திடீரென்று உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் அன்று இரவு அவர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். படப்பிடிப்பில் பங்கேற்று இருந்தபோது மயங்கி விழுந்த அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் 17ஆம் தேதி உயிரிழந்தார்.
இதை அடுத்து கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதால் தான் நடிகர் விவேக் உயிரிழந்தார் என்ற சர்ச்சை எழுந்தது. தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் சிலர் உயிரிழந்திருந்த நிலையில் நடிகர் விவேக்கும் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல திரைப்பட இயக்குனர் கே. வி. ஆனந்த்தும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் உயிரிழந்தது மேலும் பரபரப்பை அதிகரித்தது.
ஜனங்களின் கலைஞன் என்று கொண்டாடப்பட்ட விவேக் மரணம் ரசிகர்களை பெரிதும் உலுக்கி எடுத்தது. அவருக்கு தடுப்பூசி செலுத்தியபோது உரிய விதிகளை பின்பற்றப்படவில்லை என்று பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் அரசு உரிய விதிகளை பின்பற்றி தான் நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று விளக்கம் அளித்தது.
அரசு அளித்த விளக்கத்தை ரசிகர்களும் மக்களும் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளவில்லை. விவேக்கின் மரணத்தில் தொடர்ந்து சர்ச்சை எழுப்பி கொண்டே இருந்தனர். இந்த நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஒரு புகாரை அனுப்பி இருந்தார். அதில், நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும், அவரின் மரணம் குறித்தும் சந்தேகம் எழுப்பி இருந்தார். இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த புகாரை அடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது தேசிய மனித உரிமைகள் ஆணையம். அந்தக் கடிதத்தில், சமூக ஆர்வலர் புகார் மனு மீது எட்டு வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அது குறித்த அறிக்கையை புகார்தாரர் தரப்பில் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதத்தில் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து ஆராய்ந்து வந்த தேசிய குழு தற்போது தகவல் வெளியிட்டிருக்கிறது. நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கோரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆராய்ந்த தேசியக் குழு தகவல் வெளியிட்டிருக்கிறது.