இரண்டாமாண்டு மாணவி மூன்றாவது மாதத்தில் தற்கொலை
கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த மாணவிக்கு திடீரென்று திருமணம்செய்து வைத்து விட்டனர் பெற்றோர். திருமணமான மூன்று மாதத்திலேயே அப்பெண் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது.
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் அகிலன்(33), கிண்டியில் குடிநீர் வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி ரோனிஷா(22).
சென்னை அண்ணாநகரில் தனியார் கல்லூரியில் எம்.காம். இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தவரை அகிலனுக்கு பேசி திருமணம் செய்து வைத்துள்ளனர். இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்திருக்கிறது.
ரோனிஷாவின் மாமனார் குணசீலன் வணிகவரி அலுவலகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றிருக்கிறார். மாமியார் எழிலகத்தில் தட்டச்சராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் மாமனார் குணசீலன் அரக்கோணம் சென்றிருந்த நிலையில், மாமியார் எழிலகத்திற்கு வேலைக்கு சென்றிருக்கிறார். கணவரும் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் தனியாக இருந்த ரோனிஷா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
தற்கொலை குறித்து ஆவடி போலீசார் வ ழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்று மாதத்தில் தற்கொலை செய்திருப்பதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.