என் மரணத்திற்கு காரணம் ரஞ்சித், அருண், தினேஷ்.. +1 மாணவியின் தற்கொலை கடிதம்
என் மரணத்திற்கு காரணம் ரஞ்சித், அருண், தினேஷ் என்று பள்ளி மாணவி தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தாலும் தோழியின் அம்மாவையும் வழக்கில் சேர்த்துள்ளனர் போலீசார்.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுமி பதினொன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இவரது தந்தை ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். தாயார் ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரத்தில் இருந்து தனது தாய்க்கு போன் செய்த மாணவி, தனது தோழியின் அம்மா தன்னை கண்டபடி திட்டி விட்டார். ஆனால் நான் எந்த தப்பும் செய்யல என்று கதறி அழுதிருக்கிறார். இதைக் கேட்டு பதறிய தாய், பொறுமையாக இரு நான் உடனே புறப்பட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு அவசரஅவசரமாக புறப்பட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் அதற்குள் அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இதையடுத்து தனது கணவருக்கும் தகவல் சொன்ன அந்த பெண்மணி, வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு புகார் கூறி இருக்கின்றார்கள். இதை எடுத்து வெள்ளிதிருப்பூர் போலீசார் மாணவியின் தோழியையும் அவரின் அம்மாவையும் பிடித்து விசாரித்தபோது, தனது மகளுக்கு கடந்த சில நாட்களாக இளைஞர்கள் சிலர் போன் பேசி தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் ஆத்திரமாகி என் மகளின் நம்பரை உங்களுக்கு யார் கொடுத்தது என்று கேட்டபோது இந்த பெண்ணின் பெயரை தான் சொன்னார்கள். அதனால் தான் நான் அந்த மாணவிக்கு போன் செய்து கடுமையாக திட்டினேன் என்று சொல்லி இருக்கிறார்.
இதனால்தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று போலீசார் நினைத்திருந்த நிலையில், தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அந்த கடிதத்தில் , என் மரணத்திற்கு தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித் அருண் தினேஷ் ஆகிய மூவரும் தான் காரணம் என்று எழுதி இருக்கிறார். இதை அடுத்து அந்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தோழியின் அம்மா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.