உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என்று சொல்லி பணமோசடி - பெண்ணுக்கு மிரட்டல்
உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என்று சொல்லி பணமோசடி செய்ததோடு அல்லாமல் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததால் போலீசுக்கு சென்றிருக்கிறது விவகாரம். வேலூர் மாவட்ட சரக டிஐஜி பாபு இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவரிடம் சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக சொல்லி பணம் வாங்கியிருக்கிறார். அதுபோல அரசு வேலை வேண்டும் என்று பலரிடமும் பணம் வசூலித்து ராஜேஷிடம் கொடுத்திருக்கிறார் தேன்மொழி.
பல லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட ராஜேஷ் அரசு வேலை வாங்கித் தராததால் பணம் கொடுத்தவர்கள் தேன்மொழிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேன்மொழி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதன்பின்னரும் நிலைமை மோசமானதால் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் தேன்மொழி.
புகார் கொடுத்த தகவல் அறிந்ததும் தேன்மொழியை தொடர்பு கொண்டு, தான் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஆள் என்றும் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் என்றும் சொல்லி மிரட்டி இருக்கிறார். இந்த ஆடியோ ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சரக டிஐஜி பாபு இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் ராஜேஷ் மறுபடியும் தேன்மொழியை அழைத்து வீட்டின் முகவரியை கொடுக்கச்சொல்லி மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதையடுத்து ராஜேஷ் மீதான சாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள் போலீசார்.