அகம் டிவி வழியாக அகத்தின் உள்ளே.. வீடியோ கான்பரன்சியில் கமல்ஹாசன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஐந்தாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெளிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன், அதன் பின்னர் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் அதனால் மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சி அரசியல் தலைவர்களும், இளையராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கமல்ஹாசன் விரைந்து நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
இதை அடுத்து, இவர் தான் தொகுத்து வழங்கப் போகிறார் இனி அவர் தான் தொகுத்து வழங்க போகிறார் என்று பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சன் டிவியில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய்சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார் என்று ஒரு செய்தி ஓடிக் கொண்டிருக்க ,நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றும், சூர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்றும் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், எனது தந்தையின் ஆரோக்கியத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவித்த, பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார் என்று கமல்ஹாசன் மகள் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் சுருதிஹாசன் தான் வரும் வாரத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் ரசிகர்களுடன் பேச ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக சுருதிஹாசன் தெரிவித்திருந்ததை வைத்து, கமல்ஹாசன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்றும் தகவல்கள் பரவுகின்றன. இதைத்தான் சுருதிஹாசன் சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். ஆகையால் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ’’அகம் டிவி வழியாக அகத்தின் உள்ளே..’’ என்ற கமலஹாசனின் குரல் ஒலிக்கும் என்று தெரிகிறது.