மாணவி மரணத்தில் பெண் வார்டன் கைது
விடுதி அறையை சுத்தம் செய்யச் சொன்னதால் பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதையடுத்து மாணவி தற்கொலை தொடர்பாக விடுதி பெண் வார்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபாளையம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் லாவண்யா. 17 வயதான இந்த லாவண்யா தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அடுத்த மைக்கேல் பட்டியில் இயங்கிவரும் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்திருக்கிறார்.
அங்குள்ள பள்ளியின் விடுதியில் தங்கி அவர் படித்து வந்திருக்கிறார். திடீரென்று மாணவி லாவண்யா விசம் குடித்துவிட்டதாகவும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் , மாணவியின் தந்தை முருகானந்தத்திற்கு தகவல் வர, அவர் விரைந்து சென்று மகளின் நிலைமையை அறிந்த பின்னர், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.
இதை அடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யாவிடம் திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரணையில் விடுதியில் தன்னை வேலை செய்யுமாறு வார்டன் சொன்னதால்தான் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்துவிட்டதாக மாணவி சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து போலீசார் பள்ளி வார்டன் சகாயமேரி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி லாவண்யா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.