ரயிலை நிறுத்த முற்பட்ட டிரைவரின் முயற்சி தோல்வி - அப்படியும் உயிர்தப்பிய தாய்-குழந்தை
திடீரென்று தண்டவாளத்தில் விழுந்துவிட்ட குழந்தையை காப்பாற்ற தாயும் குதித்த நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் விரைந்து வந்து விட்டது. இதை பார்த்துவிட்ட டிரைவர் ரயிலை நிறுத்த முயற்சி செய்தும் முயற்சி தோல்வியடைந்து விட்டது. பிளாட்பாரத்தில் நின்று இதை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் பதைபதைத்து கொண்டிருக்க, அதிர்ஷ்டவசமாக தாயும் குழந்தையும் தப்பித்து விட்டனர். தாயின் தலையில் அடிபட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராணி. 37 வயதான யுவராணி கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது ஒன்பது மாத குழந்தையை எடுத்துக்கொண்டு பெங்களூருக்கு செல்வதற்காக காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று மதியம் 12 மணிக்கு சென்றிருக்கிறார்.
முதலாவது பிளாட்பாரத்தில் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பிளாட்பாரத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் விழுந்து இருக்கிறது. இதில் பதறிப்போய் குழந்தையை காப்பாற்ற யுவராணி தண்டவாளத்தில் குதித்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து அந்த தண்டவாளத்தில் எஸ்வந்த்பூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்திருக்கிறது.
இதனால் உடனே தண்டவாளத்தில் இருந்த தாயும் குழந்தையும் வெளியே வர முடியவில்லை. இதைப் பார்த்துவிட்ட டிரைவர் முருகேசன் ரயிலை நிறுத்துவதற்கு போராடி இருக்கிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டது.
இதை பார்த்துக்கொண்டிருந்த பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் பதறி இருக்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக தாயும் குழந்தையும் உயிர்தப்பி இருக்கிறார்கள். தலையில் அடிபட்டதால் யுவராணி வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தால் அந்த ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றிருக்கிறது.
ரயில் வந்த வேகத்தில் காற்று பலமாக அடித்ததால் தண்டவாளத்தின் மத்தியில் விழாமல் குழந்தையும் தாயும் நடுவில் இருந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் உயிர் தப்பி இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.