பிரபல ரவுடி சிடி மணியின் குண்டர் சட்டம் ரத்து
பிரபல ரவுடி சிடி மணியை குண்டர் சட்டத்தில் அடைத்த சென்னை காவல் ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது . சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்து அறிவித்திருக்கிறது.
கொலை, கொலை மிரட்டல் என்று பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கடந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதியன்று போரூர் மேம்பாலத்தில் இருந்து தப்பி ஓட முயன்றபோது வளசரவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜூன் 26ஆம் தேதி சிடி மணியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
சிடி மணியின் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவர் தந்தை பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் பிரகாஷ் , மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது .
அப்போது தன் மகனை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் போலீசார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் கைது செய்ததாகவும், ஆனால் போரூட் மேம்பாலத்தில் ஓடியபோது அவரை கைது செய்திருப்பதாகவும் வழக்கின் மனுவில் கூறியிருந்தார்.
ஆவணங்களை தெளிவாக வழங்காமல் குண்டர் சட்டத்தில் அடைத்ததாகவும் அவர் தனது வழக்கின் மனுவில் தெரிவித்திருந்தார். பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவரை கைது செய்தாலும் குற்ற வழக்குகளின் தீவிரத்தைப் பொறுத்தே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் நீதிபதிகள், ஆவணங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து வழங்கி இருப்பதாகவும் மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் நகலை முறையாக வழங்கவில்லை என்றும் சில பக்கங்களில் தெளிவில்லை என்றும் சுட்டிக் காட்டி சிபிஐ பணியை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.