ஏ ப்ளஸ் நிலை ரவுடி குணாவை என்கவுண்டர் செய்யும் திட்டம் எதுவும் இல்லை; ஆனால்..

கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 42 வழக்குகள் உள்ள ஏ ப்ளஸ் நிலை ரவுடியான படப்பை குணாவுக்கு உதவியதாக 40 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதே நேரம், குணாவை என்கவுண்டர் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் காவல்துறை விளக்கம் அளித்திருக்கிறது.
காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடிதடி ,வெட்டு குத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது என்றும், கொலை , கொலை முயற்சி, ஆள்கடத்தல் என்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த படப்பை குணா என்கிற குணசேகரன் மீது 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால் குணாவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டியபோது அவர் தலைமறைவாகி விட்டார். தற்போது தலைமறைவாக இருக்கும் குணாவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். குணாவை பிடிக்கும் விதமாக அவருக்கு உதவி செய்யும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரைக்கும் ஒட்டு மொத்தமாக 40 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள் என்று தெரியவந்திருக்கிறது.
8 காவலர்கள், 10 முதன்மை காவலர்கள், 15 தலைமை காவலர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், மூன்று காவல் ஆய்வாளர்கள் என்று மொத்தமாக 40 பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் டிஜிபி . சிவகங்கை விருதுநகர் தூத்துக்குடி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த40 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
குணா தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரது மனைவி எல்லம்மாளை கடந்த 9 ஆம் தேதியன்று கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எல்லம்மாள் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் தனது கணவரை போலீசார் என்கவுண்டர் செய்ய கூடாது என்று கோரியிருந்தார்.
இதுகுறித்து காவல் துறை சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் விளக்கத்தில் என்கவுண்டர் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. அவர் சரண் அடையும் பட்சத்தில் காவல்துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப் படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது .