நெல்லை அருகே பார் உரிமையாளர் வெட்டிக்கொலை… ஆடு திருடும் கும்பல் வெறிச்செயல்…
நெல்லை
நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக டாஸ்மாக் பார் உரிமையாளர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை பேட்டை அடுத்த மயிலபுரம் பகுதியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (54). இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். கருத்தபாண்டி கொண்டாநகரம் – திருப்பணிகரிசல்குளம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் பார் நடத்தி வந்தார். அதன் அருகிலேயே அவருடைய தோட்டமும் உள்ளது.
நேற்றிரவு தோட்டத்தில் தங்கியிருந்த கருத்தபாண்டி இன்று காலை தனது வாகனத்தில் புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் கருத்தபாண்டியை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த சேரன்மகாதேவி டிஎஸ்பி பிரதீப், சுத்தமல்லி காவல் ஆய்வாளர் ஜீன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கருத்தபாண்டி ஆடு திருடும் கும்பல் மீது போலீசில் புகார் அளித்ததால், ஆத்திரமைந்த அந்த கும்பல் கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.