கொரோனாவால் இறந்த தாய்… வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட மகன்…
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே கொரோனாவால் தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அஜாம் (24). இவர் தனது தாயாருடன் ஓசூர் அடுத்த பாகலூர் ஆசிரியர் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் அஜாமின் தாயாருக்கு திடீரென சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து, அவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அஜாம், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் பாகலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவால் தாய் இறந்த செய்தி கேட்டு வேதனையில் மகன தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.