அடுத்த ஆட்டம் யாருடையது? எப்போது?
சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பரபரப்பாக இயங்கி வந்த கிஷோர் கே. ஸ்வாமி, கல்யாணராமன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், கைதாகி சிறையில் இருக்கும் மாரிதாசையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக சொல்லி கொந்தளித்திருக்கிறது பாஜக.

எதிர்கட்சியாக இருக்கும்போது கருத்து சுதந்திரம். ஆளும்கட்சியானால் கருத்து அழிப்பு, ஒழிப்பு கைது , வன்முறை மிரட்டல் ராஜ்ஜியம் paid digital Goondas
மூலம் கருத்து சுதந்திரம் குரல்வளை நெறிப்பு என்று கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வன்முறை, மிரட்டலை கடைபிடித்து எதிர்கட்சிகளை ஒடுக்க முயலும் அறிவாலயத்தின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து முகத்தில் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுதும் பாஜக நடத்தும் என்றும் அறிவித்திருந்த நிலையில், கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. பாஜகவின் சமூக வலைத்தள தொண்டர்களை தொடர்ந்து கைது செய்து அச்சுறுத்தி வருகிறது திமுக அரசு. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து அண்ணாமலை, ‘’தமிழக ஆளுநர் மதிப்புக்குரிய ஆர்.என். ரவியை தமிழக பாஜக தலைவர்களுடன் சென்று சந்தித்தேன். நமது கட்சியின் சமூக வலைதள தொண்டர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், தேசியவாதிகளின் குரலை நசுக்கிக் கொண்டு இருக்கும் அறிவாலயம் அரசனுடைய போக்கை கண்டித்து அறிக்கையாக சமர்பித்தோம்!’’ என்று தெரிவித்திருக்கிறார்.
அண்ணாமலையின் இந்த நடவடிக்கை குறித்து எஸ்.ஆர்.சேகர், ’’இது முதல்கட்ட நடவடிக்கை. அடுத்த ஆட்டம் யாருடையது? எப்போது? காத்திருந்து பார்ப்போம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.


