என்னாச்சு..? பொ.செ.வை துறந்தாரா சசிகலா?
பொதுச்செயலாளர் என்கிற இப்பதவியை நீக்கிவிட்டு சட்ட விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதிமுகவில் இல்லாத சசிகலா தன்னை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்று சொல்லி வருகிறார். அப்படித்தான் இத்தனை நாளும் அவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அவரது ஒவ்வொரு அறிக்கையின் முடிவிலும் வி. கே. சசிகலா கழக பொதுச்செயலாளர் அ.இ. அதிமுக என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்நிலையில் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வி. கே. சசிகலா கழக பொதுச்செயலாளர் அ.இ. அதிமுக என்ற வாசகம் இடம் பெறவில்லை . இதனால் சலசலப்பு எழுந்திருக்கிறது.
எம்ஜிஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சசிகலா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த தருணத்தில் பின்வரும் உறுதிமொழிகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்வோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவர் மேலும் அந்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றி தனது வாழ்க்கையை அர்ப்பணித்து அனைவருடைய இதயங்களிலும் நிரந்தரமாய் குடிகொண்டிருக்கும் பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர், டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் எந்நாளும் நிலைத்திருக்கும் வண்ணம் அவர் கட்டிக்காத்த கொள்கைகளையும் உருவாக்கித்தந்த சட்டதிட்டங்கள் விதிகளையும் அடிபிறழாமல் கடைப்பிடித்து கழகத்திற்கு விசுவாசமிக்க தொண்டர்களாக துரோகத்தை விரும்பும் தொண்டர்களாக பணியாற்றவும் இந்நாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவித்திருக்கிறார்.
அவர் தனது அறிக்கையில் இது மாதிரி பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளவர், இறுதியாக உறுதியேற்போம் உறுதி ஏற்போம் புரட்சித்தலைவரின் பாதையில் சென்றிட உறுதியேற்போம், நிரூபிப்போம் நிரூபிப்போம் புரட்சித் தலைவரின் வாரிசுகள் நாம் என்பது நிரூபிப்போம், வென்று காட்டுவோம் வென்று காட்டுவோம் துரோகங்களை வேரறுத்து வென்று காட்டுவோம், போராடுவோம் போராடுவோம் தமிழர்களின் உரிமைக்காக போராடுவோம், , உருவாக்குவோம் உருவாக்குவோம் தமிழகத்தில் மக்களாட்சியை உருவாக்குவோம், புரட்சித் தலைவர் நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! புரட்சித் தலைவி புகழ் ஓங்குக! என குறிப்பிட்டிருக்கிறார். அதன் பின்னர், கழகப் பொதுச் செயலாளர் அ.இ.அதிமுக என்று அவர் குறிப்பிடவில்லை.