நாங்கள் இளிச்சவாயன்களா? எங்களை பிஸ்கோத்து என்று பார்த்தீர்களா? பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்
கோவையில் அதிமுக மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. ஏழு மாத ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யாத திமுக அரசை கண்டித்து வரும் 9-ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதிமுக ஆட்சியில் போட்ட 300 சாலை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டனர். இதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்திலேயே மிகப் பெரிய கூட்டமாக இருக்க வேண்டும். கூட்டத்தை பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒவ்வொரு டிவிஷனில் இருந்தும் 200 பேர் அழைத்து வரவேண்டும். லட்சம் பேர் திரண்டு கோவையில் நடக்கும் போராட்டத்திற்கு வர வேண்டும்.
கோவை போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அப்புறம் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் வந்து போராட வேண்டிய நிலைமையை போலீசார் ஏற்படுத்தக்கூடாது. காவல்துறை வழக்குப் போட்டால் எதிர்வினையாற்ற தயார் என்ற எச்சரிக்கையை காவல்துறைக்கு எச்சரித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக எதற்கும் அஞ்சாது. இன்னும் பத்து அமாவாசைக்குள் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் அதிமுக அரியணை ஏறும். 10 அமாவாசைக்குள் மீண்டும் அதிமுக அரியணை ஏறும். அதற்கு அச்சாரமாக இந்த போராட்டம் அமையட்டும். பொறுமையாக ஆறு மாத காலம் இருந்தோம் என்பதற்காக நாங்கள் என்ன இளிச்சவாயன்களா? எங்களை பிஸ்கோத்து என்று பார்த்தீர்களா? நாங்கள் சிலிர்த்து எழுந்தால் அதிமுக எதிரிகள் தாங்க மாட்டார்கள் என்றார்.
அவர் மேலும், அண்ணா திமுகவுக்கு துரோகம் செய்தவன் யாரும் இதுவரைக்கும் வாழ்ந்ததில்லை என்று தெரிவித்தார்.