சசிகலாவின் பொ.செ.வுக்கு ஆப்பு! ஓபிஎஸ் -இபிஎஸ்க்கும் ஆப்பு!
அதிமுகவில் எந்த முடிவுகளையும் சரியாக எடுக்க முடியாமல் போவதற்கு காரணம் இரட்டை தலைமைதான். அதனால் ஒற்றை தலைமையின் கீழ் கட்சி வரவேண்டும் என்று கட்சியினரே சொல்லி வருகின்றனர். இதை வெளிப்படையாக வலியுறுத்திய பலரையும் கட்சியை விட்டு வெளியேற்றி விட்டார்கள். தற்போது இரட்டை தலைமையை விரும்பாத அன்வர்ராஜா கட்சியை விட்டு வெளியேற்ற பட்டிருக்கிறார்.
இது ஒரு புறமிருக்க, தற்போது இருக்கும் இரட்டை தலைமைக்கு ஆப்பு வைத்து விட்டு சசிகலாவின் பொதுச் செயலாளர் கனவுக்கும் ஆப்பு வைக்கும் விதமாக அதிரடி காட்டியிருக்கிறது அதிமுகவின் செயற்குழு. இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் தான் இந்த அதிரடி நடந்திருக்கிறது.
ஜெயலிதாவின் மரணத்திற்குப் பின்னரும் கூட அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிதான் ஒற்றை தலைமைதான் இருந்தது. அதுவும் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர், கட்சிக்குள் மீண்டும் ஓ .பன்னீர்செல்வம் வந்தபோது, பொதுச் செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் உருவாக்கப்பட்டன. பின்னர் அதையே இருவரும் விரும்பாதவர்களாக இருந்தனர்.
பழையபடி ஒற்றைத் தலைமையின் கீழ், அது தனது தலைமையின் கீழ் வர வேண்டும் என்று பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் காய் நகர்த்தி வருவதாக அடிக்கடி தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இவர்கள் இருவருக்கும் இடையே இப்படி மோதல் போக்கு இருந்து வந்த நிலையில்தான் சசிகலா கட்சிகள் நுழைந்து பொதுச்செயலாளர் ஆகிவிடலாம், மீண்டும் ஒற்றைத்தலைமையை கொண்டு வந்துவிடலாம் என்று தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
ஒற்றைத்தலைமையின் கீழ் கொண்டுவர நடக்கும் முயற்சியில் சசிகலாவை உள்ளே விட்டு விடக்கூடாது என்பதற்காகவே இரட்டைத் தன்மையை உறுதி செய்திருக்கிறார்கள் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும்.
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி என்பதையே நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றியதை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளராக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நடந்து வருகிறது.
அதிமுகவின் இரட்டை தலைமையாக ஓ. பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிச்சாமி இருந்து வந்தாலும், தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று இன்றைக்கு வரைக்கும் சொல்லி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் சசிகலா. இந்த நிலையில் அவரின் இந்த கனவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக தான் இன்றைய செயற்குழுவில் ஒரு தீர்மானத்தை ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்றும், இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக மூலமாகவே தேர்ந்தெடுப்பார்கள் என்றும், அதிமுகவின் சட்டவிதி 20(அ) 2 திருத்தி அமைக்கப்படுகிறது. இந்த விதியை மாற்றுவதற்கு திருத்துவதற்கு நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என்றும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது .
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட இந்த சிறப்பு தீர்மானத்திற்கு வரும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆக, இனி அதிமுக இரட்டை தலைமையின் கீழ் இயங்கும் என்று உறுதியாக முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது . இந்த சிறப்பு தீர்மானம் பொதுச்செயலாளர் பதவிக்காக உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் சசிகலாவின் வழக்கு விசாரணையின் போதும் சமர்ப்பிக்க அதிமுக தலைமை தயாராக இருக்கிறது என்றும் தகவல்.
சசிகலா எப்படி அதிமுகவிற்கு பொதுச்செயலாளராக இனி சொல்லிக்கொண்டிருக்க முடியாதோ, அதேபோல்தான் ஓ. பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிச்சாமி இனிமேல் ஒற்றை தலைமைக்கு காய் நகர்த்த முடியாது என்றும் இதன் மூலம் தெரிய வருகிறது.