நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை - எஸ்.ஏ.சி.யால் எழுந்த சலசலப்பு
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியின்போது அவரது ஆட்சியை விமர்சித்து திரைப்படங்களை எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் எஸ்.ஏ. சந்திரசேகர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சந்திரசேகர். ஆனாலும் கூட எஸ்.ஏ.சி.ஐ அழைத்து பாராட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர். தன்னை வரச்சொல்லி எம்.ஜி.ஆர். அழைத்ததுமே, பயந்தபடியே கருணாநிதியிடம் சென்று விசத்தை சொல்ல, ஜாக்கிரதையாக போய்விட்டு வா என்று சொல்லி பயத்தை அதிகரித்து அனுப்பி வைத்திருக்கிறார்.

நிச்சயம் எம்.ஜி.ஆர். நம்மை அடிக்கத்தான் போகிறார். வரும்போது சட்டை கிழந்துதான் வரப்போகிறோம். அதை போட்டோ எடுத்துவிட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு போட்டோகிராபர்களையும் அழைத்து சென்றவர் எஸ்.ஏ.சி. தைரியத்திற்காக மனைவி ஷோபாவையும் அழைத்து சென்றிருக்கிறார். அவர் சந்தேகப்பட்டது மாதிரியே, வரவேற்பரையில் இருந்த அத்தனை பேரையும் கூப்பிட்டு பேசி அனுப்பிய எம்.ஜி.ஆர். எஸ்.ஏ.சியை கூப்பிடவேயில்லை.
எல்லோரையும் அனுப்பிவிட்டு அடிக்க போகிறார் என்று நினைத்துமே வியர்த்து கொட்டியிருக்கிறது எஸ்.ஏ.சிக்கு. எல்லோரும் போன பிறகு கடைசியாக எஸ்.ஏ.சியை அழைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். சட்டை கிழிந்து முடி கலைந்து வந்ததும் போட்டோ எடுத்து பேட்டி கொடுத்துவிட வேண்டும் என்ற நினைப்பிலேயே அறைக்குள் சென்றவருக்கு ஆச்சரியம்.
உங்களிடம் ப்ரீயாக பேசலாம் என்றுதான் மற்றவர்களை எல்லாம் அனுப்பிவிட்டு அழைத்தேன் என்று சொல்லி சிரித்திருக்கிறார். எஸ்.ஏ.சி. பயந்ததற்கு மாறாக, அவரிடமும் அவர் மனைவி ஷோபாவிடமும் அன்பாக பேசி, தொடர்ந்து இதுமாதிரியான படங்களை எதிர்பார்க்கிறேன் என்று சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த எஸ்.ஏ.சி. கட்சி தொடங்கியபோது, நான் கருணாநிதியுடன் நெருக்கமாகப் பழகினேனே தவிர அரசியல் ரீதியாக என் ஆதரவு அவருக்கு நான் என்றைக்கும் தெரிவித்தது இல்லை என்று சொல்லி இருந்தார். விஜய் கட்சி ஆரம்பிக்க தாமதித்ததால் அவர் பெயரில் கட்சி ஆரம்பித்து அதற்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் வரைக்கும் சென்றதால் கட்சியை கலைத்துவிட்டு பழையபடி திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் எஸ். ஏ. சந்திரசேகர். அவர் மாநாடு படத்தில் முதல்வர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இதனால் முதல்வர் குறித்து அவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
மாநாடு படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர், அவரும் அரசியல்வாதியாக நடித்திருப்பதால், முதல்வராக நடித்திருப்பதால் அரசியல் கபேசினார்.
இந்தப்படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், இப்படத்தை அடுத்து மூன்று படங்களில் முதலமைச்சராக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சொல்லி அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தினார்.


