உதயநிதி மேயராகமாட்டார்... அமைச்சர்தான்!
திமுக சீனியர்களை பார்த்தால், உதயநிதி மேயராகிறாரா? அமைச்சராகிறாரா? என்றுதான் எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தந்தை மு. க. ஸ்டாலினை போலவே உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் ஆவார். அதன்பின்பு எம்எல்ஏ, அமைச்சராகி, துணை முதல்வர் ஆகிவிடுவார் என்றுதான் ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால் சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அவர் எம்எல்ஏ ஆனதும் தற்போது அவர் அமைச்சராகிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. சென்னை மேயராகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

உதயநிதியின் நண்பரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் .இந்தக் கோரிக்கை திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுகவின் மூத்த நிர்வாகி கே. என். நேரு இதுகுறித்து பேசியபோது, அன்பில் மகேஷ் சொன்னதுபோல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்று சொல்லவில்லை . முதலமைச்சர் என்ன விரும்புகிறாரோ அது நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நூலகத்தை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம், உதயநிதி மேயராகிறாரா? என்ற கேள்வியை கேட்க, அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறாருங்க என்றார்.

உதயநிதியின் தந்தை சென்னை மேயராக இருந்தார். அந்த வகையில் உதயநிதியும் சென்னை மேயராக வருவார் என்ற பேச்சு எழுந்திருக்கிறதே என்று கேட்க, சட்டமன்ற உறுப்பினராக அந்த பணிகளை அவர் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார். அடுத்து அவர் பெரிய பொறுப்புக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் என்றார்.
நீங்க ஆரம்பிச்சு வச்சதுதான்...உதயநிதி அமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு, வந்தா நல்லது என்று நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்.
அன்பில் மகேஷ் பேச்சு மூலம், உதயநிதி மேயராக மாட்டார்.. அமைச்சர்தான் என்பது உறுதியாகிறது.


