மூன்றாவது அணி : ஸ்டாலின் - சந்திரசேகரராவ் நடத்திய ஆலோசனை
காங்கிரஸ் , பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைப்பதில் சந்திரசேகரராவ் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக அவர் பல மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசுக்கும் சந்திரசேகரராவ் அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் நடந்துள்ள இந்த சந்திப்பு நடந்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு சென்றார். அங்கே மு .க. ஸ்டாலின், சந்திரசேகரராவுக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் முதல்வர் இல்லத்தில் சந்திரசேகரராவ் -ஸ்டாலின் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த சந்திப்பில் தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் கே. டி. ராமராவ் மற்றும் இரு மாநில முதலமைச்சர்களின் குடும்பத்தினரும் இடம்பெற்றிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்திருக்கிறது.
இந்த சந்திப்பின் போது தேசிய அரசியல் மற்றும் இரு மாநில நல்லுறவு தொடர்பாக இரு முதல்வர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. கோதாவரி, காவிரி நதிநீர் இணைப்பு தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இரு முதல்வர்களும் ஆலோசனை நடத்தியதாகவும், காங்கிரஸ் -பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் பரவுகிறது.
முன்னதாக நேற்றைய தினம் தமிழகம் வந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திருச்சி ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதர் ஆலயத்தில் குடும்பத்துடன் வழிபட்ட பின்னர் ரங்கநாயகி தாயார் சன்னதியில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நான் இரண்டாவது முறையாக வந்திருக்கிறேன். கோவிலை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்த அவர், திமுக பொறுப்பை ஏற்றதும் முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வந்து இருக்கிறேன். நாளை மாலையில் சென்னையில் தமிழ்நாடு முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவரை சந்திக்க இருக்கின்றேன் என்று தெரிவித்திருந்தார். தெலுங்கானா முதல்வரின் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.