அப்போது சின்னம்மா காலில் விழுந்தார் எடப்பாடி - அன்வர்ராஜா தடாலடி
ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மனக்கசப்பு இருக்கிறது என்று கட்சிக்கு வெளியேயும் பேசப்பட்டுவரும் நிலையில் அது உண்மைதான் என்று அதிரடி காட்டியிருக்கிறார் அன்வர் ராஜா.
நாங்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடிபழனிசாமியும் சொன்னாலும், இருவருக்குள்ளும் மனக்கசப்பு இருப்பதை அதிமுகவின் மூத்த நிர்வாகி அன்வர்ராஜா தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும், எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஒற்றுமையாக இருந்து வழி நடத்தினால் கட்சிக்கு நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
என்னை தவிர அதிமுகவில் எல்லோரும் சின்னம்மா காலில் விழுந்தவர்கள்தான். எடப்பாடி முதல்வர் ஆனபோது, சின்னம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். சசிகலா ஆதரவு என்பது கணிசமாக உள்ளது. அவரும் அதிமுகவில்சேர தயாராக இருந்தார். ஆனால், அவருக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. சசிகலாவை கட்சியில் சேர்த்திருந்தால் தேர்தலில் அதிமுக வென்றிருக்கும் என்றும் அவர் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து ஒருமையில் பேசியதாக ஆடியோ வெளியாகி இருந்த நிலையில், அன்வர்ராஜா மேலும் சலசலப்புகளை அதிகப்படுத்தி இருக்கிறார்.