மாஜி முதல்வரை காரை விட்டு இறங்கவிடாமல் துரத்திய மக்கள் - சென்னை பரபரப்பு
முன்னாள் முதல்வரும் கடந்த ஆட்சியின் துணை முதல்வருமாணவர் ஓ. பன்னீர்செல்வம். அவர் தற்போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்து வருகிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வரும் அவர் சென்னையின் மழை வெள்ள பகுதிகளை ஆய்வு செய்ய சென்றிருக்கிறார்.
கடந்த மாதம் பெய்த மழையில் சென்னை வெள்ளக்காடாக மாறி இருந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சென்று மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்கள்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் தொடர் மழை பெய்து மீண்டும் சென்னை வெள்ளக்காடாக மாற்றியிருக்கிறது. பல சாலைகள் ஆறு போல் காட்சியளிக்கின்றன. சென்னையின் பல இடங்கள் குளங்களாக மாறியிருக்கின்றன. இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கெல்லீஸ் பி.டி. ஆர். கார்டன் பகுதிக்கு சென்றிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
அப்போது அவரது காரை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள், உங்க ஆட்சியில் எதுவும் செய்யாமல் இப்போது மட்டும் எதுக்கு வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதிமுகவினர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. எங்களுக்கு எங்க அண்ணன் சேகர்பாபு இருக்காரு. உங்க உதவி தேவை இல்லை என்று கறார் காட்டி இருக்கிறார்கள். இதனால் காரை விட்டு இறங்க முடியாமலேயே சென்றிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.
சென்னையில் பிராட்வே, துறைமுகம், புரசைவாக்கம் ,கெல்லிஸ் உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் சேகர்பாபு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி மக்களை கவர்ந்து வருகிறார். இதனால் அவருக்கு அப்பகுதி மக்களிடையே செல்வாக்கு அதிகம் இருக்கிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அங்கு சென்றதால் தான் அவரை விட்டு இறங்காமல் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.