ஒன்பதாவது கோரிக்கை சற்றே சிக்கலானது - பாஜக எழுப்பும் கேள்வி
தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயமாக்காதே, வடக்கு- கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் தமிழ்த்தேசமும் அதன் இறைமையும் சுயநிர்ணயத்தை அங்கீகரி, தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காண நீதி, ஆக்கிரமிப்புப் படைகளான சிறிலங்கா இராணுவத்தை தமிழர் தாயகத்தில் இருந்து அகற்று, தமிழர்களின் நிலங்களை சுவீகரிப்பதை நிறுத்து, எங்கள் கடலில் அன்னிய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்து, முன்னாள் போராளிகளை சுதந்திரமாக வாழ விடு , தமிழ் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து என்ற கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையில் இன்று 'தமிழ் தேசிய முன்னணி' நடத்திய பேரணி நடத்தியது.
இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, இலங்கையில் இன்று 'தமிழ் தேசிய முன்னணி' நடத்திய பேரணியில் ஏந்தி சென்ற பதாகையை இங்கே காண்கிறோம். நம் தொப்புள் கொடி உறவுகள் அந்நாட்டு அரசாங்கத்திடம் முன் வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. உடனடியாக அந்நாட்டு அரசால் நிறைவேற்றப்பட வேண்டியவைகள். ஆனால், ஒன்பதாவது கோரிக்கை சற்றே சிக்கலானது. அவர்கள் கூறுகிற அத்துமீறுகிற அந்நிய மீனவர்கள் யார்?அவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளதா?அதை அந்நாட்டு அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியுமா?இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நம் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு இதில் என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அவர் மேலும், இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனவா தமிழக கட்சிகள். நிரந்தர தீர்வை அடையவிடாமல் குழப்பத்தை பெருக்குவதன் மர்மம் என்ன? சுமூகமான தீர்வை மத்திய அரசினால் மட்டுமே கொடுக்க முடியும் என்ற நிலையில் தொடர்ந்து இந்த விவகாரத்தில் பதட்டத்தை அதிகரித்து தீர்வு கிடைக்காதிருக்க அரசியல் செய்வது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.