கலவரம் வர வேண்டும் என்பதற்காகவே திமுக இப்படி செய்திருக்கிறது - ஜெயக்குமார் குற்றச்சாட்டு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர், அமமுகவினர் இரு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர் .
முன்னதாக அதிமுகவினர் அஞ்சலி செலுத்த காவல்துறை அனுமதி அளித்திருந்தது. அவர்கள் சென்ற பின்னர் தான் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அமமுகவினருக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ .பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி விட்டு காரில் வெளியே புறப்படும்போது அமமுகவினர் உள்ளே நுழைந்து விட்டனர்.
இதனால் அதிமுகவினர் -அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள் அமமுகவினர். இந்த பதட்டமான சூழ்நிலையில், ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது செருப்பை தூக்கி வீசி விட்டார்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார் , உடனே கூட்டத்தை கலைத்து எடப்பாடி பழனிசாமி , ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கார் செல்ல வழி செய்து கொடுத்து விட்டார்கள். அதன்பின்னர் டிடிவி தினகரன், சசிகலா சென்றார்கள்.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த சம்பவம் குறித்து திமுக மீது குற்றம் சாட்டி இருக்கிறார். ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்கனவே முறையாக அனுமதி பெற்று தான் நாங்கள் இன்று அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம். நாங்கள் நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது அமமுகவினரை உள்ளே அனுமதித்தார்கள் போலீசார்.
நாங்கள் முழுமையாக வெளியே வருவதற்கு முன்பு போலீசார் அவர்களை உள்ளே அனுமதித்து விட்டார்கள். கலவரம் வர வேண்டும் என்பதற்காகவே திமுக இப்படி செய்திருக்கிறது. திமுக இப்படி செய்கிறது என்றால், இதற்கு போலீசாரும் துணை போய் இருப்பது வேதனையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பதிலுக்கு நாங்களும் என்று மோசமாக நடந்து கொண்டிருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும். நாங்கள் சட்டத்தை மதிப்பதால் அமைதியாக இருந்துவிட்டோம். ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர் படையுடன் சசிகலா வரவில்லை குண்டர்கள் படையுடன் வந்தார் என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ .பன்னீர்செல்வம் மீது என்னுடைய அமமுகவினர் தாக்குதல் நடத்த முயன்றதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் என்ற பெயரில் கட்சி தொண்டர்களை அடித்து துரத்தும் குண்டர்களை வைத்திருக்கும் ஈன புத்தி எங்களுக்கு கிடையாது என்று சொல்லியிருக்கிறார்.