அது என் குரல் அல்ல - கதறும் செல்லூர் ராஜூ
அதிமுகவில் ஒற்றை தலைமை அது பொதுச்செயலாளர் என்று இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி -ஓ. பன்னீர்செல்வம் இருவரையும் திருப்திப்படுத்தும் விதமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று வந்து இரட்டை தலைமை ஆகிவிட்டது. இதை உடைத்து மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பழைய நிலைமையை கொண்டு வந்து ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று முயல்கிறார் சசிகலா.
அது நடக்காது என்று சொல்லி பிடிவாதமாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலைமையில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட அதிமுக பிரமுகருமான செல்லூர் ராஜூ பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
மதுரை வில்லாபுரத்தைச்சேர்ந்த சக்திவேல் ராஜன் என்பவர் குவைத்திலிருந்து செல்லூர் ராஜுக்கு அலைபேசியில் பேசியதாகவும், பதிலுக்கு செல்லூர் ராஜு பேசியது போல் அந்த ஆடியோ இருக்கிறது.
அந்த ஆடியோவில் சக்திவேல், அம்மாவுக்கு அடுத்தபடியாக கட்சியில சின்னம்மா தானே இருந்தாங்க. உங்களைப் போன்ற சீனியர்கள் எல்லாம் இதை எடுத்துச் சொல்ல வேண்டாமா என்று கேட்க, நாங்களும் அதைத்தான் விரும்புறோம். அதற்கு முறையாக போகணும் தம்பி. இல்லை என்றால் மொத்தமாக இழந்து விட்டு போய் விடுவோம் . அவங்க கைப்பற்றி போய்டு வாங்க தம்பி. அதற்காகத்தான் கம்முனு இருக்கிறோம். அதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று செல்லூர்ராஜ் செல்வது போல் இருக்கிறது.
இந்த ஆடியோ வெளியாகி, கட்சி முழுவதும் எடப்பாடி கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அதை முறையாக போய்தான் அடித்து காலி செய்ய வேண்டும். அவசரப்பட்டால் கட்சி மொத்தமும் எடப்பாடி கைக்குள் போய்விடும் என்று செல்வராஜ் மனம்திறந்து சொல்லியிருப்பதாக அதிமுகவிற்குள் சலசலப்பு எழுந்திருக்க, இதை மறுத்திருக்கிறார் செல்லூர்ராஜ்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். ‘’அண்ணா திமுகவினர் ஒற்றுமையாக இருப்பதை தெரிந்து கொண்ட சில சமூக விரோதிகள் வேண்டுமென்றே இப்படி செய்கிறார்கள். எனது குரலில் ஒருவர் பேசி அதை நான் பேசியது போல் வெளியிட்டு தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்துகிறார்கள். என் குரலில் இருக்கும் ஒருவரிடம் பேசியது போல் அந்த ஆடியோவில் இருக்கிறது. அதுவும் இரவு ஒரு மணிக்கு பேசியது போல் இருக்கிறது அதுவே முதலில் தவறு.
எங்கள் கட்சியில் வீணாக குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். நகர்ப்புற தேர்தல் வரும் நேரத்தில் இது மாதிரி எல்லாம் நடைபெறுவதால் ஆளுங்கட்சியின் சதியாக கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன். இது முழுக்க முழுக்க தவறான செய்தி . அந்த ஆடியோவில் வந்திருக்கிறது என்றாலும் அது தவறான செய்தி. அது என் குரலும் அல்ல.
நான் ஊடகத்தினர் இடம் தொடர்ந்து பேசி வருகிறேன் . அப்போது சசிகலா பற்றி கருத்து கேட்கும் போதெல்லாம் அது தலைமை முடிவு செய்யும்போது என்று சொல்லிவிடுவேன். அப்படி இருக்கும் போது நான் எப்படி இப்படி சொல்லுவேன். இப்படி தவறான ஆடியோ பரப்பியவர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிப்பேன்’’ என்று தெரிவித்தார்.
சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய அன்வர்ராஜா நீக்கப்பட்டு விட்ட நிலையில், செல்லூர் ராஜூவுக்கு இப்படி ஒரு சிக்கலில் சிக்க இருந்தார். ஆனால், அந்த ஆடியோவில் உள்ளது தன் குரல் என்று பதறிக்கொண்டு வந்து விளக்கம் அளித்திருக்கிறார்.