ஓபிஎஸ் மகனுக்கு எதிராக சாட்சியம் அளித்த தங்க தமிழ்ச்செல்வன்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி தொகுதியின் எம்பியுமான ரவீந்திரநாத்துக்கு எதிரான தேர்தல் வழக்கில் தாமாகவே முன்வந்து சாட்சியம் அளித்திருக்கிறார் தங்க தமிழ்செல்வன்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ரவீந்திரநாத்தின் வெற்றியை எதிர்த்து தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்கத்தமிழ்செல்வன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தேர்தலின் போது நடந்த முறைகேடுகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கில் தாமாக முன் வந்து சாட்சியம் அளிக்கிறேன் என்று குறிப்பிட்டார். வேட்புமனுவில் சொத்துக்கள் கண்களை மறைத்தது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் அதை ஏற்கவில்லை என்று குற்றம்சாட்டினார் தங்க தமிழ்ச்செல்வன்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தனக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப் பட்டபோதும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது தொடர்பாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக புகார் அளித்தும் கூட எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
தங்கதமிழ்செல்வன் சாட்சியம் அளித்ததை அடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
அப்போது அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் தற்போது திமுகவில் இருக்கிறார். இந்நிலையில் அவர் ஓபிஎஸ் மகனுக்கு எதிராக சாட்சியம் அளித்து இருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, அன்றைக்கு அரசியல் சூழலால் வழக்கு தொடர முடியவில்லை. வாக்காளர் மிலானி தொடர்ந்த வழக்கில் பின்னர் நான் இணைந்து உள்ளேன் என்று தெரிவித்து இருக்கிறார்.