’’திமுக மீது குற்றச்சாட்டு வரும்போது சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்..’’
திமுக அரசு மீது குற்றச்சாட்டு வரும்போது, அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தார் சி.வி.சண்முகம்.
தமிழ்நாடு முன்னாள் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் ஐ.எப்.எஸ் அதிகாரியுமான வெங்கடாசலம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெங்கடாசலத்தின் இந்த தற்கொலை பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் , திமுக ஆட்சிக்கு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் கீழ்மட்ட அதிகாரிகள் வரை அச்ச உணர்வோடு தான் செயல்படுகிறார்கள். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கோடு செயல்படுகின்றனர்.
ஐஎஃப்எஸ் வெங்கடாசலம் இறப்பில் சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
திமுக அரசு மீது குற்றச்சாட்டு வரும்போது, அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்த சண்முகம், ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு எழுந்த போது அண்ணாநகர் ரமேஷ் குடும்பத்தோடு தற்கொலை, 2ஜி வழக்கில் சாதிக்பாட்சா தற்கொலை நடந்தது. மரக்காணம் சேர்மன் தேர்தலில் மிரட்டப்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியுள்ளார். அரசு ஊழியர்கள் தயவால் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் அரசு அதிகாரிகளை தற்கொலைக்கு தூண்டுகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார்.


