அரசியல் கலப்பில்லாமல் அணுக வேண்டும் - திமுக குற்றச்சாட்டுக்கு பாஜக விளக்கம்

 
ad

குஜராத் , மத்திய பிரதேசம்,  உத்தரகாண்ட்,  மேற்கு வங்கம் , கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது .  இந்த 5 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.   மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்த தமிழகம் இதில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. 

 தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது .  மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.   இது தொடர்பாக முறையிட மத்திய அமைச்சர் அமித்ஷாவும்  சந்திக்க அனுமதி மறுக்கிறார் என்று திமுக தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் பாஜக தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய பேரிடர் நிவாரண நிதி என்பது முழுமையாக மத்திய அரசு அளிக்கும் நிதி. பாஜக ஆட்சியில் தான் ரூபாய் 10,000 கோடியாக உயர்ந்தது என்பதும், கடந்த வருடம் கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்தவுடன்  22,184 கோடி ரூபாயை தன் பங்காக மத்திய அரசு அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 8, 257 கோடி ரூபாயை கடந்த வருடம் ஒதுக்கியுள்ளது மத்திய அரசு என்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

அனைத்து மாநிலங்களின் ஒத்திசைவோடு , ஆலோசனையோடு தான் மாநில பேரிடர் நிவாரண நிதி முடிவு செய்யப்படுகிறது. ஒரு வருடத்தில் செலவிடப்படாத நிதி மறுவருட கணக்கில் வைக்கப்படும். தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி என்றால் என்ன என்பது கூட தெரியாமால் சிலர் நீட்டி முழங்கி மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என விமர்சிப்பது முறையல்ல என்று சொல்லும் அவர், தேசிய, மாநில  பேரிடர் நிவாரண நிதியானது, பாதிக்கப்பட்ட மக்களின் அவசர  தேவைக்காக செலவிடப்பட வேண்டும் என்பதும், உதவி மற்றும் புனர்வாழ்வுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டிய நிதி. இந்த நிதியானது பயிர் இழப்பு, சொத்துக்கள் சேதம் போன்றவைகளுக்கு பொருந்தாது என்பது விதி. உதாரணத்திற்கு  சாலைகள், கட்டுமானங்கள், கட்டமைப்புகளை மறு சீரமைத்தல் போன்றவைகளுக்கு பேரிடர் நிவாரண நிதியை செலவிட முடியாது என்கிறார். 

a

அதனடிப்படையில் தான் மாநில அரசுகள் இந்த நிதியிலிருந்து  ஒதுக்கீடை கோர முடியும். செலவிட முடியும். கட்டமைப்புகள் உட்பட மற்ற சீரமைப்புகளுக்கான நிதியானது, அந்தந்த துறைகளின் நிதிநிலை மூலம் ஒதுக்கப்படும். உதாரணத்திற்கு, மின் துறை சார்ந்த செலவினங்கள் அந்த துறையின் ஆண்டுக்கான நிதி நிலை ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். அதே போல் விவசாய துறையில் ஏற்படும் இழப்புகள், காப்பீடு தவிர்த்து மற்றவை வேளாண் துறையிலிருந்து ஒதுக்கப்படும் என்று சொல்லும் நாராயணன்,

sm

நிலை இவ்வாறிருக்க, மாநிலஅரசுகள் மற்றும் எதிர்கட்சிகள் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இடம்பெற முடியாத செலவினங்களை மத்திய அரசிடம் கேட்பது, அதன் பின் மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. சமீப காலங்களில் அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் கூட தெரியாமலோ அல்லது தெரிந்திருந்தும் உள்நோக்கத்தோடு மத்திய அரசை விமர்சிப்பது, குற்றம்  சாட்டுவது அதிகரித்து வருகிறது.

n

மாநில மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதி என்பது சட்டம். அதன் வரையறைக்குள் மட்டுமே மக்களின் அவசர உதவிக்காக ஏற்படுத்தப்பட்ட நிதியம் இது என்பதை உணரவேண்டும்.  ஒவ்வொரு மாநிலத்திற்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் விதிகளை அனுசரித்தே நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில அரசுகளும் இதில் அரசியல் கலப்பில்லாமல் விதிகளின் படி இந்த நிதியிலிருந்து அளிக்கப்பட வேண்டியவைகளை தனித்து கோரி, மறுசீரமைப்பு, கட்டமைப்பு, இழப்பீடு கோரிக்கைகளை வெளிப்படைத்தன்மையோடு துறை ரீதியாக  அணுக வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.