ரஜினியிடம் கண்கலங்கிய சசிகலா - மோடி, அமித்ஷாவிடம் பேசுகிறாரா?
போயஸ் கார்டனில் கடந்த 6ஆம் தேதியன்று சசிகலா ரஜினிகாந்தை சந்தித்தது அவர் தாதாசாகிப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக என்று தகவல் பரவியது. ஆனால் உண்மையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது அதற்காக அல்ல என்று சசிகலா வட்டாரங்களில் இருந்து தகவல் பரவுகிறது.
சசிகலா சிறையில் இருந்தபோதும், அவர் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் அவர் குறித்து டிடிவி தினகரனுடன் நலம் விசாரித்து இருக்கிறார் ரஜினி. இதையெல்லாம் மனதில் வைத்து இருந்த சசிகலா, அதிமுகவில் தன்னையே விடாமல் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இனி இரட்டை தலைமையில்தான் இயங்கும் என்று தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் ரஜினியை சந்தித்து உதவி கேட்பதற்காத் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது என்று தற்போது தகவல் கசிகிறது.
ரஜினியை சந்திக்க வேண்டும் என்று சசிகலா லதா ரஜினிகாந்துக்கு போன் போட, அவர் ஆறாம் தேதி வரச் சொல்லி அனுமதி கொடுத்திருக்கிறார். அதன்படி சென்ற சசிகலா, லதா ரஜினிகாந்திடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். ரஜினியின் உடல் நலம் கருதி அவர் முதலில் சசிகலாவை சந்திக்கவில்லையாம்.
அதன் பின்னரே மாடியில் இருந்து இறங்கி வந்த ரஜினி, சசிகலாவிடம் சில நிமிடங்கள் மட்டும் பேசியிருக்கிறார். அந்த சில நிமிட சந்திப்பிலேயே கண் கலங்கியபடி பேசியிருக்கிறார் சசிகலா.
சிறைக்கு செல்லும் போது கட்சியை ஒப்படைத்து விட்டுச் சென்றேன். சிறையில் இருந்து வந்த பின்னர், நான் யார் என்று கேட்கிறார்கள். இவர்களை நம்பி ஆட்சியையும் கட்சியை ஒப்படைத்து விட்டுச் சென்ற எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பாஜக தலைமையின் தைரியத்தில்தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள். அவர்கள் ஆதரவு இருந்தாலும் அவர்களால் மக்களை சந்தித்து தேர்தலில் ஜெயிக்க முடியாது. அதனால் நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும் கட்சியின் இந்த நிலைமையை பாஜக தலைமை இடம் சொல்லுங்கள். எனக்கு ஆதரவு தரச் சொல்லுங்கள். 2024 தேர்தலில் எம்.பி. தேர்தலில் அதிக எம்.பிக்களை வெற்றி பெற வைத்து காட்டுகிறேன். எனக்காக மேலே பேச வேண்டும் என்று கோரிக்கை வைக்க,
பதறிப்போன ரஜினிகாந்த், நான் அரசியலில் தலையிட மாட்டேன். இதை பற்றி நான் யாரிடமும் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டு. அவர் மேலே மாடிக்கு சென்றுவிட்டாராம்.
'மேலே' பேச சொல்லி கோரிக்கை வைத்ததுமே 'மேலே' மாடிக்கு சென்ற ரஜினியால், அதிருப்தியில் இருந்த சசிகலாவுக்கு லதா ரஜினிகாந்த் ஆறுதல் சொல்லி இருக்கிறாராம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சசிகலாவை இருக்கச் சொல்லிவிட்டு, மேலே மாடிக்கு சென்று ரஜினியிடம் பேசிவிட்டு பின்னர் மீண்டும் கீழே வந்த லதா, கவலைப்படாதீங்க...தைரியமாக அரசியல் வேலையை பாருங்க. அவரை சமாதானப்படுத்தி அமித்ஷாவிடமும், மோடியிடமும் பேசச்சொல்கிறேன் என்று உறுதி கொடுத்திருக்கிறாராம் லதா ரஜினிகாந்த்.