ரா.பா. மீது புது புகார் -சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை

 
rb

 முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அடுத்தடுத்து மோசடி புகார்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன.  ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.  அதன்பின்னரும் தொடர்ந்து அவர் மீது பல்வேறு தரப்பினரும் புகார்களை கொடுத்து வருகின்றனர்.

 இந்த நிலையில் அவர் மீது 16 லட்சம் ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்ய,  விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் மதுரை கோமதியாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மனு தாக்கல் செய்திருக்கிறார் .

rb1

அவர் தனது மகனுக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலை வாங்கி கேட்டதாகவும் அதற்கு வாங்கித்தருகிறேன் என்று ரூ 16 லட்சம் கேட்டதாகவும்,  அவரும் கொடுத்து இருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

 இந்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாணகசேரியை சேர்ந்த பரமகுரு,   கரூர் தாந்தோணி மலையைச் சேர்ந்த முத்துசாமி,   திருச்சியை சேர்ந்த பிரின்ஸ் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருக்கிறார் செல்வராஜ்.  இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.   இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யக் கோரி செல்வராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.   இந்த மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.