அப்புறம் மாடு மேய்க்கும் சிறுவர்களுக்குத்தான் மா.செ., ஒ.செ., பொறுப்பு- எச்சரித்த ராமதாஸ்
மாடு மேய்க்கும் சிறுவர்களைத்தான் மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டியதிருக்கும் என்று கட்சியினரை எச்சரித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
பாமக ஆலோசனை கூட்டம் இன்று கடலூரில் நடைபெற்றுள்ளது. இதில் பேசிய ராமதாஸ், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட ஆள் இல்லை என்று சொல்கிறார்கள். ஆள் இல்லையென்றால் அந்தமானில் இருந்து 50 பேரை அழைத்து வந்து இருப்பேன் என்று காட்டமாக பேசிய ராமதாஸ், உள் கட்சி பிரச்சினையால்தான் கடலூர் மாவட்டத்தை இழந்தோம். கட்சிக்கு ஓட்டு வாங்கி தர முடியாவிட்டால் மாடுமேய்க்கும் சிறுவர்களைத் தான் மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டியது இருக்கும் என்று கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த கட்சி இனிமேல் இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது. பாமக வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வராக கட்சியினர் சபதம் எடுக்க வேண்டும். இதற்காக திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி மக்களிடையே கட்சி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.