எடப்பாடி பழனிச்சாமி உதவியாளரின் நண்பரையும் தூக்கியது போலீஸ்
தேடப்பட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் தனி உதவியாளராக இருந்தவர் மணி. இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு மோசடி செய்து விட்டதாக நெய்வேலியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து மணி பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்து விட்டதாக புகார்கள் தொடர்ச்சியாக குவிய தொடங்கின. இதையடுத்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மணி மீதும் அவரது நண்பர் செல்வகுமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதை அடுத்து மணி, செல்வகுமார் இருவரும் தலைமறைவானார்கள். இருவரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அதுவரைக்கும் அவர்கள் தலைமறைவாக இருந்து வந்தனர். ஆனால் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அவர்களின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த மணியை சேலம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மணியின் நண்பர் செல்வகுமார் கொண்டலாம்பட்டியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.